

பொருளாதாரம் நவீனமயமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மகளிர் அனைவரும் வீட்டிலிருந்தபடியே வருமானம் பெறக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று காஜாங் வட்டார இந்திய சமூகத் தலைவர், ராஜ்குமார் பெருமாலு வலியுறுத்தினார்.
இவர்கள் திறனை வளர்த்துக் கொள்ள மற்றும் வியாபார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சித்தாம்-சிலாங்கூர் இந்தியத் தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டில் காஜாங் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் கேக் செய்முறைக்கானப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.
இதனிடையே, மக்களின் மீது அதிக அக்கறைக் கொண்ட ஒற்றுமை அரசு, அவர்களுக்கான உதவித் திட்டங்களைத் தொடர்ந்து அமல்படுத்திக் கொண்டு வருகிறது என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர், துவான் ஷாரெட்ஸான் ஜோஹான் தெரிவித்தார்.
இதுபோன்ற வாய்ப்புகளை இந்தியர்கள் நன்குப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் 30 பேர் கலந்து கொண்டு தனித்தனியே கேக்கைத் தயார் செய்தனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை துவான் ஷாரெட்ஸான் ஜோஹான் அவர்கள் எடுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. இதில் பாங்கிக்கான பி.கே.ஆர். தொகுதித் தலைவரும் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினருமான பாலமுரளி கோவிந்தராஜு அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
கட்டணம் ஏதுமின்றி இலவசமாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் காஜாங் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சிலாங்கூர் மாநில சித்தாம் நிறுவனத் தலைவர், கேனட் அவர்கள் இதில் கலந்து கொண்டார்.
அதோடு மட்டுமின்றி இதில் சுங்கை ராமால் சட்டமன்றத்தின் சமூகத் தலைவர், சிவகுமார் அவர்களும் கலந்து கொண்டார்.

