

கோலாலம்பூர் ஏப்ரல் 26-
போர்ட்டிக்சன் தெலுக் டத்தோ கடற்கரையில் குளித்து கொண்டிருந்தபோது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு கலைவாணி, தேவகி மற்றும் சந்திராதேதி ஆகிய மூன்று சகோதரிகள் மரணம் அடைந்த செய்தி பெரும் துயரத்தையும் வேதனையும் அளிப்பதாக மனித வள அமைச்சர்
வ. சிவகுமார் தெரிவித்தார்.
தனது மூன்று மகள்களை இழந்து பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் ரவி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருக்கு ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. இப்படியொரு துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடாது.
விரைவில் கலைவாணிக்கு திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் அவரும் இரு சகோதரிகளும் ஒரே நேரத்தில் மரணம் அடைந்த செய்தி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இனிவரும் காலங்களில் கடல்களில் குளிக்கச் செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் படி அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே மனிதவள அமைச்சர் சிவகுமாரின் சார்பில் அவரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மூன்று சகோதரிகளின் இறுதி சடங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

