


கிள்ளான், மே 6-
மனிதவள அமைச்சு சொக்சோ நிறுவனத்தின் கீழ் நடத்தி வரும் வேலை வாய்ப்பு கண்காட்சியின் மூலம் இவ்வாண்டு நான்கு மாதங்களில் 16,575 பேர் வேலையில் அமர்த்தப்பட்டு உள்ளனர் என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, மொத்தம் 13 ஆயிரத்து 647 சிலாங்கூர் குடிமக்கள் மனிதவள அமைச்சின் SOCSO மூலம் வெற்றிகரமாக வேலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தேசிய வேலை வாய்ப்பு போர்ட்டல், MYFuture Jobs மூலம் வேலை வாய்ப்பு திட்டங்கள் உள்ளிட்ட வேலை வாய்ப்பு சேவைகள் மூலம் இதை உணர முடியும்.
இந்த ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் தேதி நிலவரப்படி, சிலாங்கூர் மாநிலத்தில் ஆயிரத்து 646 பேர் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 16 ஆயிரத்து 575 நபர்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம், மனித வள அமைச்சு மற்றும் SOCSO ஆகியவற்றுக்கு இடையேயான நிலையான ஒத்துழைப்பைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி மக்களிடையே நீண்டகால நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களித்து, மலேசியப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
கிள்ளான் டேவான் ஹம்ஸா மண்டபத்தில்
நடைபெறும் வேலை வாய்ப்பு கார்னிவலில் உள்ள முதலாளிகள் தங்கள் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க விரும்புகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட வேலை வாய்ப்பு கண்காட்சியை போலவே நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட பிறகு, அந்த இடத்திலேயே தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
இன்று கிள்ளான் டேவான் ஹம்ஸா மண்டபத்தில் வேலை வாய்ப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

