


கிள்ளான் மே 31-
சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டம் என்றால் என்ன? சொக்சோவில் அங்கத்தினர்களாக சேர்ந்தால் அதனால் கிடைக்கும் சலுகைகள் என்ன என்பது தொடர்பில் மலேசியர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
சொந்த தொழில் செய்பவர்களும் சொக்சோ சந்தாரர் ஆகலாம். மாதத்திற்கு 10 வெள்ளி வீதம் ஒரு ஆண்டுக்கு 120 வெள்ளி மட்டுமே அவர்கள் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் அவர்கள் சொக்சோ சமூக நல பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.
சொந்த தொழில் செய்பவர்களில் 5 லட்சத்து 70,000 பேர் மட்டுமே சொக்சோவில் அங்கத்தினர்களாக இடம் பெற்றிருக்கிறார்கள்.
இவ்வாண்டு இறுதிற்குள் பத்து லட்சம் பேரை அங்கத்தினர்களாக சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
பாதுகாப்பு
முறையான துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு, SOCSO மூலமாகவும் மனித வள அமைச்சின் வழியாக
சுயதொழில் செய்யும் தனிநபர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு சொக்சோ சமூக நல பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டம் (Skim Keselamatan Sosial Suri Rumah) கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது
டிசம்பர் 2022 முதல் இவ்வாண்டு மே 29 ஆம் தேதி வரை மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 883 இல்லத்தரசிகள் அங்கத்தினர்களாக இடம் பெற்றிருக்கிறார்கள்.
.
எனினும், இந்த தொகை 5 லட்சம் இலக்கிலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்றார் அவர்.
நான் அனைத்து இல்லத்தரசிகளையும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கிறேன்.
55 வயதிற்குட்பட்ட இல்லத்தரசிகள் சொக்சோ சமூக நல பாதுகாப்பை பெற தங்கள் மனைவிகளின் சார்பாக கணவன்மார்கள் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
நேற்று கிள்ளான் காப்பாரில் சொக்காயி மற்றும் மேருவில் குணசேகரனுக்கு மாதந்திர சொக்சோ சமூக நல நிதியுதவி தொகையை மனிதவள அமைச்சர் சிவகுமார் நேரடியாக வழங்கி பேருதவி புரிந்தபோது நிருபர்களிடம் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

