


பினாங்கு, ஜூன் 1-
வெளிநாட்டு தொழிலாளர்களை சார்ந்திருப்பதை குறைக்க நடவடிக்கையாக வரும் 2030 ஆம் ஆண்டில் மலேசியா 35 விழுக்காடு திறமையான தொழிலாளர்களை கொண்டிருப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார்.
மனிதவள அமைச்சு (KSM) மலேசியாவில் உள்ள பணியாளர்கள், தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இயங்கி வருகிறது.
தேசிய அல்லது சர்வதேச அளவில் தேவையான திறன்களைக் கொண்டிருப்பதையும் உறுதிசெய்ய, நாட்டின் திறன்மிக்க பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உறுதிபூண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
மலேசியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் அடுத்த சில ஆண்டுகளில் வளர்ந்த நாடு என்ற நிலையை அடைய போட்டித் திறன் கொண்ட பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
நாம் எப்போதும் அந்நிய தொழிலாளர்களை சார்ந்திருக்க முடியாது என்பதால் திறமையான தொழிலாளர்களை உருவாக்க வேண்டும்.
அந்த வகையில் மலேசியா 2030 ஆம் ஆண்டில் 35% திறமையான பணியாளர்களைக் கொண்டிருப்பதை இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp ஏற்பாட்டில் பினாங்கு மாநிலத்தில் மனிதவள மூலதன மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை முன்னிட்டு நேற்றிரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் சிவகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பினாங்கு மாநில ஆளுநர் Tun Dato ’ Seri Utama Ahmad Fuzi Bin Haji Abdul Razak, பினாங்கு மாநில முதல்வர் சாவ் கூன் இயோ, HRD Corp தலைவர் டத்தோ இராஜசேகரன், HRD Corp தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

