
கோலத்திரெங்கானு, ஜூன் 22-
நாட்டில் 1,500 வெள்ளி அடிப்படை சம்பளம் உண்மையில் மிக அதிகமாக இல்லை என்பதை முதலாளிகள் அறிந்திருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக பெரிய நகரங்களில், 1,500 வெள்ளி வருமானம் வெறுமனே உயிர் வாழ்வதற்கானது என்றார் அவர்.
இந்த பிரச்சினையில் அரசாங்கம் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது.
முதலில், தொழில்துறையின் சம்பள வரம்பில் தலையிடக்கூடாது. மாறாக, அது தொழிலாளர் சந்தையால் தீர்மானிக்கப்படுகிறது.
ஆகவே 1,500 வெள்ளி சம்பளம் உண்மையில் மிக அதிகமாக இல்லை என்பதை முதலாளிகள் அறிந்திருக்க வேண்டும் என்றார்.
குறைந்தபட்ச ஊதியமாக 1,500 வெள்ளி சம்பளத்தை வழங்கும் அரசாங்கத்தின் முன்முயற்சி தற்போதைய முதலாளிகளுக்கு செலவுச் சுமைகளைக் கொண்டு வந்திருப்பதாக மனிதவள அமைச்சரிடம் புகார்கள் வந்துள்ளன.
திரெங்கானு மாநிலத்திற்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் வருகை புரிந்த போது திரெங்கானு சீன வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தைச் சேர்ந்த 9 பேர் கொண்ட குழுவைச் சந்தித்தார்.
குறைந்தபட்ச ஊதியம், மகப்பேறு விடுப்பு, வாரத்தில் 45 மணி நேர வேலை நேரம், வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்னைகள் குறித்து இரு தரப்பினரும் சுருக்கமாகப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

