
புத்ரா ஜெயா ஜூன் 24-
தொழில்துறை பயிற்சி பெறும் திறன் குறைந்த மாணவர்களுக்கு உதவ தொழில் பயிற்சி அலவான்ஸ் (elaun latihan industri ) தவிர வேறு மாற்று வழிகளைத் தேடுங்கள் என்று முதலாளிகளை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொழில்துறை பயிற்சிக்காக மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்டுள்ள முதலாளிகள் பயிற்சி அலவான்ஸ் வழங்குவதோடு, குறைந்த திறன் கொண்டவர்களுக்கு உதவ சில மாற்று வழிகளையும் பார்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு பரிந்துரைக்கிறது என்றார் அவர்.
மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவை முன்மொழியப்பட்டுள்ளது.
முதலாளிகளை நம்பியிருக்கும் தொழில்துறை பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி அலவான்ஸ் நிர்ணயம் செய்யும் நிர்வாகம் தொடர்பான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கூற்றுடன் நான் உடன்படுகிறேன் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
“மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் (தொழில்துறை பயிற்சி பெற) பயிற்சி அலவான்ஸ் பங்களிப்பாக அல்லது உதவியாக வழங்க வேண்டும்.
தனியார் துறையினருக்கான பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த அலவான்ஸ் விவகாரம் தொடர்பாக தமது அமைச்சு விரிவான பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்.
தனியார் நிறுவனங்களுக்கான தொழில்துறை பயிற்சி அலவான்ஸ் குறித்த கொள்கை அல்லது வழிகாட்டுதல்களை அரசாங்கம் இன்னும் உருவாக்கவில்லை,
ஏனெனில் இது ஒரு சிக்கலான பிரச்சினையாகும். இது உயர் கல்வி அமைச்சுகளுடன் ஆழமான ஆய்வு மற்றும் ஆலோசனை தேவைப்படுகிறது
அரசு அல்லது தனியார் துறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான மற்றும் சமமான சலுகைகள் கிடைக்க வேண்டும்.
“தேவைப்பட்டால், தனியார் துறையில் தொழில்துறை அல்லது நடைமுறை பயிற்சி அலவான்ஸ் செலுத்துவதற்கான தெளிவான மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை அரசாங்கம் உருவாக்கும் என்று அவர் சொன்னார்.

