


செமினி, ஜூன் 29-
மாணவர்களுக்குச் சமயக் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழப்புணர்வை ஏற்படுத்த மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்தது.
இக்கருத்தரங்கு கடந்த வாரம் தேசிய வகை செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
.இதில் 1ஆம் ஆண்டு தொடங்கி 6ஆம் ஆண்டு மாணவர்கள் வரை கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் சிறப்புச் சொற்பொழிவாளராக மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் ஸ்தாபகர் சங்கர குருதாசர் சுவாமி மகேந்திரர் வருகைப் புரிந்தார்.
மாணவர்களுக்குக் கல்வியும் சமயமும் இரு கண்களைப் போல மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
அதனால்தான் உயர் நெறியுடன் கூடிய கல்வி, மாணவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் சமயத்தின்பாலும் நல்ல ஈடுபாடு காட்ட வேண்டும்.
அதுமட்டுமின்றி ஆலயங்களும் தமிழ்ப்பள்ளிகளும் மலேசியாவில் வாழும் இந்தியர்களின் அடையாளம் என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழு மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபாவின் தேசிய தலைவர் கலைமாமணி டாக்டர் பிரேம கண்ணன் தெரிவித்தார்.
அதை கருத்தில் கொண்டு இதுபோன்ற பல பயனுள்ள சமய கருத்தரங்குகளை ஸ்குவாட்ஸ் மலேசியா நடத்தி வருவதாக அவர் கூறினார்.
வாழ்க்கையை நெறியுடன் வாழ ஒரு மனிதனுக்கு அடிப்படையானது சமயம் என்பதை மலேசிய ஸ்ரீ ஆதி சங்கரர் திருமடத்தின் ஸ்தாபகர் சங்கர குருதாசர் சுவாமி மகேந்திரர் தனது சொற்பொழிவில் தெரிவித்தார்.
அதே வேளையில் நமது கலை கலாச்சாரம் நீடிப்பதற்கு மாணவர்கள் கல்வியோடு சமய அறிவையும் பெற்றிருத்தல் அவசியம் என அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் எந்நிலையிலும் மாணவர்கள் தாய்மொழியானத் தமிழை விட்டு விடக் கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறான சமயக் கல்விச் சொற்பொழிவுகள் மாணவர்களின் விழிப்புணர்வுக்காக அணைத்து பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று தேசிய வகை செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிர்வாகத் துணைத் தலைமையாசிரியர் திருமதி சுந்தரி வலியுறுத்தினார்.
இந்த கருத்தரங்கு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் திருமதி சுந்தரி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு ஜெயபாலன், ஸ்குவாத்ஸ் மலேசியா உறுப்பினர்களுக்கும் கலைமாமனி டாக்டர் பிரேம கண்ணன் நன்றிகளைத் தெரிவித்தார்.

