

கோலாலம்பூர் ஜூலை 4-
உலோகப் பொருள் மறுசுழற்சி துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்று
மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் கூறியிருப்பது எங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தின் செயலாளர் எஸ்.முத்தப்பன் தெரிவித்தார்.
ஸ்கிராப் மெட்டல் எனப்படும் உலோகப் பொருள் மறுசுழற்சி தொழில் துறை எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனையை
மனிதவள அமைச்சு கவனத்தில் கொண்டிருக்கிறது என்றும் மனிதவள அமைச்சர் சிவகுமார் கூறியிருக்கிறார்.
மனிதவள அமைச்சர் சிவகுமாரின் அறிவிப்பை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.
உணவகம் உட்பட பல துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அரசாங்கம் வாய்ப்பை வழங்கியுள்ளது.
ஆனால், பல ஆண்டுகளாக அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள உலோக பொருள் மறுசுழற்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் தொழில் துறைகளை மூட வேண்டிய நெருக்கமான காலக் கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம்.
நாட்டின் மேம்பாட்டிற்கு நாங்களும் உழைக்கிறோம். அரசாங்கத்திற்கும் முறையாக வரியை செலுத்துகிறோம்.
ஆனால், அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது.
மிக விரைவில் மனிதவள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பல துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களை பெற்றுத் தந்த மனிதவள அமைச்சர் சிவகுமார், உலோக பொருள் மறுசுழற்சி துறையில் ஈடுபட்டுள்ள எங்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என இன்று வெளியிட்ட அறிக்கையில் எஸ் .முத்தப்பன் தெரிவித்துள்ளார்.

