
புத்ரா ஜெயா, ஜூலை 5-
ஓம்ஸ் அறவாரியம், மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல்
துறை ஆதரவோடு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்று நடத்தும்
செம்மொழியான தமிழ் மொழியின் 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மலாயா பல்கலைக்கழகத்தில் வேந்தர் அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
வரும் ஜூலை 22 ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு இந்த மாநாட்டை மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பது பெருமையளிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
புதிய வரலாறு எழுதப் போகும் இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உலகில் இருந்து தமிழ் அறிஞர்கள் உட்பட 2,000 பேராளர்கள் மற்றும் 1,000 பார்வையாளர்கள் பேர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பேருரை உலகப் பேராளர்களை பெரிதும் கவரும் என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்.

