


புத்ரா ஜெயா , ஜூலை 24-
Niosh எனப்படும் தேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தில் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மணியம் என்ற 34 வயது இளைஞர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி திடீர் மரணம் அடைந்தார்.
இவரின் மரண செய்தியை கேட்டு niosh மற்றும் சகா அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.
கோலகுபு பாருவைச் சேர்ந்த மணியம் கிருஷ்ணன் – விமலா தம்பதியரின் மூத்த புதல்வரான ஹரிகிருஷ்ணன் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்.
இவரின் சகோதரி தாரனேஸ்வரி கால்நடை மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார். இவரின் தம்பி ஜீவன் கல்லூரி மாணவர் ஆவார்.
உடல் சோர்வாக இருக்கிறது என்று தூங்கச் சென்ற ஹரிகிருஷ்ணன் தூக்கத்திலேயே திடீர் மரணம் அடைந்தார்.
இவர் பணியாற்றிய தேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தின் காப்புறுதி திட்டத்தின் மூலம் இரண்டு லட்சம் வெள்ளி இவரின் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
புத்ரா ஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேரடியாக 2 லட்சம் வெள்ளி காசோலையை பெற்றோர் மணியம் கிருஷ்ணன் – விமலா விடம் ஒப்படைத்தார்.
காப்புறுதி நிதியை பெற்றுக் கொண்ட ஹரிகிருஷ்ணன் பெற்றோர் துயரத்தை தாங்கி கொள்ள முடியாமல் கண்ணீர் சிந்தினர்.
மனிதவள அமைச்சர் சிவகுமார் இவர்களுக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார்.
மிகவும் உருக்கமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் Niosh தலைமை செயல் முறை அதிகாரி ஹஜி ஆயோப் கான், மனிதவள மேலாளர் நோர்லீசா இடாவாதி, முகமட் ஹசேன் கானபிரகாஷ் வரதராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
காப்புறுதி நிதியை பெற்றுக் கொண்ட ஹரிகிருஷ்ணன் பெற்றோர் மணியம் கிருஷ்ணன் – விமலா ஆகியோர் மனிதவள அமைச்சர் சிவகுமார் மற்றும் தேசிய வேலையிட பாதுகாப்பு சுகாதார கழகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

