

ஈப்போ, செப் 7-
அமைச்சராக இருக்கும் காலக் கட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு நன்மைகளை செய்வேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார்.
பதவி இன்று வரும். நாளை போகும். இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு நன்மையை செய்வோம். அதுதான் எனது குறிக்கோள் என்றார் அவர்.
நேற்று ஈப்போவில் அனைத்துலக தீபாவளி விற்பனை சந்தை விழாவை தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக. சுக்மாவில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறாமல் இருந்தது.
மனிதவள அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் இந்தியர்களின் பாரம்பரிய இவ்விரு தற்காப்பு கலையான சிலம்பம் மற்றும் கபடி சுக்மாவில் இடம் பெற போராடினேன்.
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோவை சந்தித்து 2014 சுக்மாவில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற அனுமதி பெற்று தந்தேன்.
14 ஆண்டுகளாக இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள தடை விதிக்கப்பட்டது.
இதனால் இந்திய பாரம்பரிய தொழில் வியாபாரிகள் பெரும் அளவில் பரிதவித்தார்கள்.
உள்துறை அமைச்சு, உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதியை பெற்றுத் தந்துள்ளேன்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்கி விட்டார்.
அதிகளவில் இந்திய இளைஞர்கள் தொழில் திறன் கல்வியை பயில வேண்டும் என்பதற்காக மனித வள அமைச்சு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக நியோஸ் எனப்படும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தின் வழி 790 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க முன் வந்துள்ளது என்றார் அவர்.
இதனிடையே நேற்று ஈப்போ லிட்டில் இந்தியாவுக்கு சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் இந்திய பாரம்பரிய தொழில் வணிகர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

