

கோலாலம்பூர் செப் 10-
அண்மையில் 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இடைநிலை பள்ளிகளில் தமிழ்மொழி பாடம் கற்றுக் தர அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இடைநிலைப் பள்ளிகளில் 15 மாணவர்கள் இருந்தால் மட்டுமே தமிழ் மொழி பாடத்தைப் போதிப்பது என்ற நிபந்தனையைத் தளர்த்தப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
இந்நாட்டில் தமிழ் மொழி செழித்தோங்குவற்கு பிரதமர் உறுதுணையாக இருக்கிறார் என்பதற்கு நல்லதொரு சான்றாக அமைந்துள்ளது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழி பாடம் போதிக்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக்கிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக அவர் சொன்னார்.
நேற்று ஜெயபக்தி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 30 தமிழ்ப்பள்ளிகளின் நூல் நிலையங்களுக்கு நூல்களை அன்பளிப்பு செய்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கெனவே கல்வி அமைச்சரிடம் பேசினேன்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும் கல்வி அமைச்சரிடம் இது பற்றி கலந்து ஆலோசித்தேன்.
விரைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

