


கோலசிலாங்கூர்,
செப் 18-
சமுதாய சீர்கேடு பதிவுகளை புறக்கணித்து விட்டு நல்ல நல்ல செய்திகளை தாங்கி வரும் செய்திகளை பகிருங்கள் என்று பொதுமக்களை மனித வள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் பதிவுகள் அதிக அளவில் டிக் டோக்கில் பகிரப்படுகிறது.
இதனால் சமுதாயத்திற்கு எந்தவொரு நன்மைகளும் இல்லை.
இதை பார்த்து இளம் தலைமுறையினர் கெட்டு போகிறார்கள். இதற்கு முடிவு கட்டுவது எளிதல்ல.
ஆனால் நம்மால் இதுபோன்ற சமுதாய சீர்கேடுகளை புறக்கணிக்கலாம் என்று கோலசிலாங்கூர் இரண்டரை மைல் ஸ்ரீ சுப்பிரமணிய ஆலய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் சமய வழிபாட்டிலும் சமயம் சார்ந்த நிகழ்வுகளிலும் அதிக கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது.
சமுதாயம் சார்ந்த தேவராம் வகுப்புகள், டியூஷன் வகுப்புகள், கணினி வகுப்புகள், கராத்தே வகுப்புகளை ஆலய நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் செய்து வரும் இதுபோன்ற நிகழ்வுகளை டிக் டோக்கில் பதிவேற்றம் செய்யுங்கள்.
இது சமுதாயத்தின் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும். இதை பின்பற்றி மற்ற ஆலயங்களும் சமுதாயம் சார்ந்த பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
இதனால் இந்திய சமுதாயம் பயன் பெறும் என்பதால் பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை அதிக அளவில் பகிரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
ஆலயத் தலைவர் கண்ணதாசன், செயலாளர் நாராயணசாமி, ஆலோசகர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

