

பெட்டாலிங் ஜெயா, செப்.26-
கல்விக்கும் சமய நம்பிக்கைக்கும் முக்கியத்துவம் வழங்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
ஸ்ரீ முருகன் நிலையத்தின் 41 ஆண்டுகால அனுபவத்தில் நான் கண்ட உண்மை இதுவென்று அதன் தோற்றுநர், டான்ஸ்ரீ தம்பிராஜா தெரிவித்தார்.
இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும். அந்த வெற்றிக்கான அனைத்து ரகசியங்களும் நமது சமயத்திலேயே அடங்கியுள்ளது.
ஆகையால் நமது பெற்றோர்கள் கல்வியுடன் சமயத்திற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.
அப்படி வழங்கும் குடும்பங்களின் பிள்ளைகள் நிச்சயம் சாதிப்பார்கள் என்று அவர் கூறினார்.
ஸ்ரீ முருகன் நிலையத்தில் சரவணப் பொய்கை உபயம் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.
மாணவர்களிடையே ஸ்டேம், அறிவியல் கல்வித் திட்டம் மீதான ஆர்வத்தை தூண்டும் நிகழ்வுகள் நடைபெற்றன.
நடமாடும் கோளரங்கின் வாயிலாக மாணவர்கள் கோள்களையும் சூரிய மண்டலத்தையும் கண்கூடாகக் கண்டு மகிழ்ந்தனர்.
இதைத் தவிர்த்து கங்காரு கணிதப் பட்டறை, பெற்றோர்களுக்கான ஆயர்வேத கருத்தரங்கு ஆகியவையும் நடைபெற்றன.
இதன் உச்சக்கட்டமாக மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட 1001 ஸ்கந்த அக்னி விளக்கு (அகல் விளக்கு) மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், வரும் அக்டோபர் 21ஆம் தேதி சுங்கைவே ஸ்ரீ சக்தி ஈஸ்வரி ஆலயத்தில் இந்த விளக்குகளை கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 26ஆம் தேதி ஸ்ரீ முருகன் நிலையத்தில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப நிகழ்வும் நடைபெறவுள்ளது என்று அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ் கூறினார்.