
புத்ரா ஜெயா, நவ 29-
நேற்று இரவு பினாங்கு பத்து மாங்கில் ஒரு தளவாடக் கிடங்கு இடிந்து விழுந்ததில், மூன்று வங்காளதேச கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்தனர்.
இருவர் படுகாயமடைந்தனர். மேலும் நான்கு பேர் இன்னும் சிக்கிக் கொண்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவர் தற்போது பினாங்கு மருத்துவமனையில் (HPP) சிகிச்சை பெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட மற்ற நான்கு பேரை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பினாங்கு காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனிதவள அமைச்சு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளது.
பினாங்கு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் (JKKP) புலனாய்வு அதிகாரிகள் குழுவினர் இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியும்படி மனிதவள அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் கீழ் சட்டத் தேவைகள் மீறப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்க விரிவான விசாரணையை மேற்கொள்ளும் படியும் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வேலை நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு மனிதவள அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.

