

கோலாலம்பூர் டிச 6-
நாட்டில் உள்ள இந்திய உணவகங்களில் வேலை செய்வதற்கு அந்நிய தொழிலாளர்களை பெற்றுத் தந்து பேருதவி புரிந்த மனிதவள அமைச்சர் வ சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மலேசிய இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவர் சுரேஸ் கோவிந்தசாமி தெரிவித்தார்.
மனிதவள அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் இந்திய உணவகங்களுக்கு அந்நிய தொழிலாளர்கள் கிடைப்பதற்கு உதவி செய்தீர்கள்.
இதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் வேளையில் Gantian Pekerja வுக்கு மீண்டும் அனுமதி தாருங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
உணவகங்களில் வேலை செய்யும் ஒருவர் திடீரென நோய் அல்லது வேறு காரணங்களால் சொந்த நாட்டிற்கு திரும்பினால் அவருக்கு பதில் புதிய தொழிலாளியை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
Gantian Pekerja அனுமதியை வழங்கினால் உணவகங்கள் எதிர் நோக்கி இருக்கும் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு பிறக்கும் என்று அவர் சொன்னார்.
மலேசிய இந்திய உணவகங்கள் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய போது அவர் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

