

ஈப்போ, டிச 9-
பேராக் மாநிலத்தில் மிகப்பெரிய தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கி வரும் மகிழம்பூ தமிழ்ப் பள்ளியில் புதிய திறந்த வெளி மண்டபம் கட்டும் பணிக்கு முழு ஆதரவு வழங்குவேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் இன்று அறிவித்தார்.
இன்று காலையில் மகிழம்பூ தமிழ்ப் பள்ளிக்கு சிறப்பு வருகை புரிந்த அமைச்சர் சிவக்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர் சிவக்குமார் வருகையால் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் புண்ணியமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வினோதன் மற்றும் பள்ளி தலைமையாசிரியை கோகிலவாணி, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்தனர்.
பள்ளி வளாகத்தில் குறிப்பாக நுழைவாயில் ஒட்டி ஐந்து லட்சம் வெள்ளியில் திறந்த வெளி மண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த திறந்த வெளி மண்டபம் கட்டப்பட்டால் பலவிதமான விளையாட்டு உட்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் இங்கு நடத்திக் கொள்ளலாம்.
மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மழையில் நனைந்து போகாமல் இருக்க திறந்த வெளி மண்டபம் பெரும் உறுதுணையாக இருக்கும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.
பள்ளி நிர்வாகம் முன் வைத்த கோரிக்கையை உடனடியாக பரீசிலித்த அமைச்சர் சிவக்குமார் கண்டிப்பாக திறந்த வெளி மண்டபம் கட்டுவதற்கு எல்லா உதவிகளையும் வழங்குவதாக பலத்த கைத்தட்டலுக்கு இடையே அறிவித்தார்.
அமைச்சர் சிவக்குமார் அரசியல் செயலாளர் ஸ்டீவன் சாவ் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

