
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அதிரடியாக அறிவித்த அமைச்சரவை மாற்றம் மலேசிய இந்தியகள் குறிப்பாக தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக தமிழ் படித்த அமைச்சர் இல்லாத அமைச்சரவையை அன்வார் உருவாக்கியுள்ளார்.
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவக்குமார் மனிதவள துறையின் முழு அமைச்சராக இருந்தார்.
தற்போது அவரை நீக்கிய அன்வார் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோவை இளக்கவியல் துறையில் முழு அமைச்சராக்கியுள்ளார்.
அதோடு, ஒற்றுமை துறை துணையமைச்சராக சரஸ்வதி கந்தசாமி, சட்டத்துறை விவகாரங்களுக்கான துணையமைச்சராக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், கூட்டுறவு தொழில்முனைவோர் மேம்பாட்டு துறை துணையமைச்சராக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஆர்.ரமணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு பின்னர் மனிதவள அமைச்சராக பணியாற்றிய குலசேகரன் தற்போது என்ன காரணத்திற்காக துணையமைச்சர் அளவிற்கு இறங்கி விட்டார் என தெரியவில்லை.
சரி நிலமை இப்படி இருக்கையில், இந்தியகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கவனிக்க போவது யார் என்ற முக்கிய கேள்வி எழுந்தள்ளது.
கல்வி, பொருளாதாரம், பிரஜா உரிமை, விளையாட்டு, வேலை வாய்ப்பு என பல்வேறு ரீதியில் இந்திய சமுதாயத்தினர் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆனால், இவைகளுக்கு தொடர்பே இல்லாத துறைகளே இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம் குறித்து அன்வார் அறிவித்த பின்னர் சமூக ஊடகம் முழுவதும் எதிர்ப்புக் குரல் அனல் பறந்து வருகின்றன.
இது குறித்து பிரதமர் அறிவாரா அல்லது தெரியாதது போல் இருக்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
கடந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு இந்தியர்கள் அன்வாருக்காக வாக்களித்துள்ளனர். ஆனால் பிரதமராக பதவியேற்ற நாள் முதல் இன்று வரை இந்திய சமுதாயத்திற்கென எந்த சிறப்பு செய்திகளும் வரவில்லை. ஆனால், மேலும் எரிச்சலூட்டும் விதமாக தமிழர் இல்லாத அமைச்சரவை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு தொடங்கி மனிதவள அமைச்சர் பதவி இந்திய தலைவர்களின் வசமே இருந்து வந்தது. தற்போது அதனை பறித்துக் கொண்டதற்கான காரணம் என்ன?
அடுத்த பொதுத் தேர்தல் வரை இந்த அமைச்சரவையே நீடிக்கும் என அன்வார் கூறியுள்ளார். இன்னும் 4 ஆண்டுகளுக்கு இந்தியர்களின் பிரச்சினைகளை யார் கவனிக்க போவது?
மொழி தெரியாதவர்களிடம் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதில் என்ன பயன்? அன்வாரை பிரதமராக பார்க்க வேண்டுமென உறுதியோடு வாக்களித்த இந்தியர்களுக்கு பிரதமர் கொடுத்துள்ள சிறந்த பரிசு ஏமாற்றம்.

