
கோலாலம்பூர்,டிச26:
தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையேற்க்கும் உலகத் தமிழர்களின் பெருமைமிகு விழாவான அயலகத் தமிழர் நாள் 2024 நனிசிறந்த முன்னெடுப்புகளோடு அதன் இறுதிக்கட்ட பணிகளில் இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் நிலையில் அயலகத் தமிழர்களின் ஆர்வம் அதன் ஏற்பாடு குழுவிற்கு பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
உலகத் தமிழர்களின் உணர்வாகவும் தமிழினத்தின் பெருமை சேர்க்கும் விழாவாகவும் அமைந்திருக்கும் இவ்விழாவிற்கு அயலகத்தமிழர்களை திரளாக கலந்து கொள்ள அழைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
உலகெங்கும் தமிழினம் சீர்மிகு வாழ்வு வாழ்ந்தாலும் தொப்புள்கொடி உறவை மெய்பித்த தமிழ்நாடு அவர்களின் எண்ணங்களிலும் சிந்தையிலும் நிலைத்து நிற்கும்.
அவ்வகையில்,உலகளாவிய நிலையில் தமிழினம் ஒன்றுபடவும்,வலுவான இனமாய் அதன் தொன்மையையும் பாரம்பரிய,கலை,பண்பாட்டையும் கட்டிக்காகவும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு முதலைமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெறுகிறது என்பது பெருமிதமானது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் தமிழினத்தின் பெரும் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதிக்கு அடுத்து அவரது பாணியில் உலகத் தமிழினத்தின் காவலனாய் தன்னை தமிழுக்காக அர்ப்பணித்து ஆற்றலோடு இயங்கி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் அயலகத் தமிழர் நாள் விழா உலகத்தமிழர்களின் முகவரியாகவும் தனித்துவ அடையாளமாகவும் உருபெற்றுள்ள நிலையில் உலகத் தமிழர்களின் திரளான வருகையே இவ்விழாவின் தனித்துவ வெற்றி என்றனர் ஏற்பாடு குழுவினர்.
வருகின்ற ஜனவரி திங்கள் 11,12ஆம் நாள்களில் நடைபெறவிருக்கும் இவ்விழா மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சில் கே.எஸ். மஸ்தான் அவர்களின் தலைமை முன்னெடுப்பில் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் உலகத் தமிழர்களுக்கு,குறிப்பாக படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் அயலகத் தமிழர் நூல்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நனிச் சிறந்த முன்னெடுப்பும் இவ்விழாவில் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருநாள்களுக்கு சென்னை வர்த்தக மையத்தில் மிக பிரமாண்டமான முறையில் நனிச் சிறந்த முன்னெடுப்புகளுடன் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பெரும் முயற்சியாலும் உலகத் தமிழர்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் முனைப்போடும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் திருமதி.ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறந்த வகையில் இப்பெருவிழா நடைபெறுவதற்கான ஆக்கப்பூர்வப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றும் கொண்டிருக்கிறது.
அதேவேளையில்,இவ்விழா ஆணையர் மதிப்புமிகு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலில் மிக சிறந்த ஒரு விழாவாக உலகத் தமிழர்களின் பெருமை சொல்லும் அடையாளமாகவும் உயிர்பெற்று வருவதாகவும் கூறும் ஏற்பாடு குழுவினர் அயலகத் தமிழர் நலத்துறை துணை இயக்குநர் திருமிகு கே.இரமேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பு முயற்சியில் பல்வேறு நாட்டு படைப்பாளர்கள் ஒருங்கிணைந்து சங்கமிக்கும் தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்க்கும் மொழி,இனம் காக்கும் பெருவிழாவாக இவ்விழா நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,அயலகத் தமிழர்களின் படைப்புகளுக்கும் நூல்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் அதேவேளையில் இப்பெரும் விழாவில் அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை தொடக்கி வைத்தல்,உள்ளூர் மற்றும் அயலக உலகத்தமிழர்களிடையே (தொழில் முனைவோர்) இணைப்புகளை ஏற்படுத்துவது,அயலக இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனைகள் வழங்குதல்,அயலகத் தமிழர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை,வளர்ச்சி,கலை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்தல் ஆகியவற்றுடன் நாட்டுப்புற பாடல் மற்றும் செவ்வியல் தொடர்பான கலை நிகழ்ச்சிகள்,இயல்-இசை-நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகளோடு புத்தக கண்காட்சி என பல்வேறு சிறப்பு அம்சங்களும் தமிழினத்தின் பெருமை பேசும் பல்வேறு நனிச் சிறந்த நிகழ்ச்சிகளும் இப்பெரும் விழாவில் அமைந்திருக்கும்.
தொடர்ந்து,அயலகத் தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்ள கல்வி,மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட வேண்டு “ எனது கிராமம்” என்கின்ற திட்டத்தினையும் இந்நிகழ்ச்சியில் துவக்கி வைக்கப்படும் என்றும் ஏற்பாடு குழுவின் ஒருங்கிணைப்பாளார் மதிப்புமிகு பேராசிரியர் முனைவர் பொன் கதிரேசன் தெரிவித்தார்.
ஓர் இனத்தின் பெருமையை எடுத்துரைக்கவும் அந்த இனத்தின் தொன்மையோடு அதன் பெருமைமிகு வரலாற்றையும் மெய்ப்பிக்கும் வகையில் தலைமுறைகள் கடந்து கடல்கள் கடந்தும் வாழும் தமிழர்களிடையே மொழி – இன உணர்வினை மேலோங்க வைக்கவும் உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழினம் அதன் தொன்மையான வரலாற்றையும் பூர்வீக மண்ணையும் அதன் பெருமையையும் போற்றும் வண்ணம் அமைந்திருக்கும் மிகச் சிறப்பு வாய்ந்த இவ்விழாவில் உலகத் தமிழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசு மற்றும் அதன் ஏற்பாடு குழுவின் பெரும் எதிர்பார்ப்பாகும்.
உலகளாவிய தமிழ்,தமிழர் வாழ்வியல் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணியாகவும் உலகத் தமிழர்களை ஒன்றுப்படுத்தி இனம்,மொழி,தொன்மை,வரலாற்றை மெய்ப்பிக்கும் நனிச் சிறந்த விழாவாகவும் அமைந்திருக்கும் இவ்விழாவில் உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி தமிழன்னைக்கு பெருமை சேர்க்க அன்போடு அழைப்பு விடுப்பதாக பேராசிரியர் முனைவர் பொன் கதிரேசன் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் கேட்டுக் கொண்டார்.

