
ஈப்போ, டிச.26:
பேராக் ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் அடுத்தாண்டிற்கான தைப்பூசம் கண்டிப்பாக நடைபெறும்.
தைப்பூசம் நடைபெறாது என்ற வதந்திகளை ஒருபோதும் நம்பாதீர்கள் என்று பொதுமக்களை பேராக் மாநில மனிதவளம், ஒற்றுமை, சுகாதாரம் மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கேட்டுக் கொண்டார்.
அடுத்தாண்டு ஜனவரி 25 ல், இங்கு நடைபெறும் தைப்பூச திருவிழாவில் பேராக் மாநில அரசாங்கத்தின் தலையீடு இருக்கும். தற்போது இந்த ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவில் ஏற்பட்டுள்ள நிர்வாக பிரச்சினை தீர்வு காணும் வரை மாநில அரசுவின் ஈடுபாடு கண்டிப்பாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த தைப்பூச திருவிழா முந்தைய நிர்வாகத்தினரும், தற்போது தேர்தலில் வென்ற தரப்பினரும் ஒன்றிணைந்து தற்காலிக நிர்வாகத்தை உருவாக்கி தைப்பூசத்தை வழிநடத்த ஆலோசனை வழங்கப்படும். இன்னும் மூன்று வாரங்களில் தைப்பூசம் நடைபெறவுள்ளது. ஆகவே, அதற்கான ஏற்பாடுகளை இந்த தற்காலிக நிர்வாகம் வழிநடத்தும். இன்னும் இரு வாரங்களில் சங்க பதிவு இலாகா( ஆர் ஓ எஸ்) யார் முறையான நிர்வாகத்தினர் என்ற அறிவிப்பை செய்து விடுவார்கள். அதன் பின் சம்பந்தப்பட்ட தரப்பினர் முறைப்படி ஆலயத்தை வழிநடத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆலயத்தின் ஆண்டுக்கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்வாண்டு நவம்பர் 26 ல் நடத்தப்பட்டது. அப்படி தாமதமாக நடத்த எண்ணினால் இரு மாதங்களுக்கு முன்னதாக ஆர் ஓ எஸ் சிடம் முறைப்படி கடிதம் எழுதி அனுமதி கேட்டிருக்க வேண்டும். ஆனால், பழைய நிர்வாகம் இதனை செய்ய தவறி விட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அப்படி ஆர் ஓ எஸ் முறையான நிர்வாகத்தை அறிவிக்க தவறினால் மீண்டும் மறுதேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்தேர்தல் தன்னுடைய தலைமையிலும், பார்வையின் கீழ் நடைபெறும் என்று சிவநேசன் சொன்னார்.
பொறுப்பற்ற மற்றும் முறையற்ற நிர்வாகத்தின் வாயிலாக இத்தகைய குளறுபடிகள் இந்த ஆலயத்தில் உருவாகி விட்டது. மேலும் பிரச்சினைகள் தொடருமானால், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்நாட்டுத் துறை அமைச்சரையும் தாம் சந்திக்க போவதாக அவர் உறுதியளித்தார்.

