
பெட்டாலிங் ஜெயா, ஜன 7-
நாட்டில் புகழ்பெற்ற பெட்டாலிங் எஸ்டேட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 21 ஆம் தேதி மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.
ஜனவரி 21 ஆம் தேதி ஏகாதசி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.00 க்கு மேல் 8.30 மணிக்குள் மகரலக்னத்தில் பெட்டாலிங் எஸ்டேட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக வைபவம் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது என்று கோவில் செயலாளர் சதீஷ் நாயர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாயிலாடு துறையைச் சேர்ந்த சிவஸ்ரீ ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியார் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஆகம முறைப்படி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார்கள்.
நூறு ஆண்டுகள் மிகவும் பாரம்பரியமிக்க பெட்டாலிங் எஸ்டேட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலை டான்ஸ்ரீ டத்தோ ஹரி நாராயணன் தலைமையிலான ஏழு பேர் அடங்கிய அறங்காவலர் குழு பராமரித்து வருகிறது.
கோவில் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஹரி நாராயணன் தலைமையில் நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தில் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகு மகேஸ்வர பூசைகள் நடைபெறும். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றார்.
மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகு தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல அபிஷேகம் இடம் பெறும் .
பக்தர்கள் திரளாக வருகை தந்து மகா கும்பாபிஷேகம் மற்றும் மண்டல அபிஷேகம் பூசைகளில் கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே
பெட்டாலிங் எஸ்டேட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவில் டான்ஸ்ரீ டத்தோ ஹரிகிருஷ்ணன், சதீஷ் நாயர்,
டத்தோ ஆனந்த கிருஷ்ணன், தங்கபெருமாள், டத்தோ டாக்டர் சுசிலா நாயர், மோகனா கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

