
இலங்கை கிழக்கு மாகாண மேதகு ஆளுநர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்களின் அழைப்பை ஏற்று அரசு விருந்தினராக திரிகோண மலையில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு நிகழ்ச்சியை மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
தமிழர்கள், இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் மூவினமும் அதிகமாக வாழும் திரிகோணமலையில் ஒரு வரலாற்றுப் பூர்வ நிகழ்ச்சியாக இந்த ஜல்லிகட்டு நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜல்லிகட்டு போட்டியை மலேசியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஆளுநரின் சிறப்பு விருந்தினராக, அரசு மரியாதையோடு பங்குகொண்டு திறந்து வைத்தது மலேசியத் தமிழர்களாகிய நமக்கும் பெருமை சேர்க்கிறது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம், முதல் முறையாக இலங்கையைக் கடந்து ஒரு தமிழருக்கு இலங்கையில் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு இப்போது பரவலாக பேசப்படுவது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. அந்த பெருமைக்குரிய நிகழ்ச்சியை மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்கள் திறந்து வைத்தது, உலகத் தமிழர்கள் மத்தியில் டத்தோ ஸ்ரீ அவர்களுக்கு இருக்கும் மதிப்பையும, மரியாதையையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

