
ஈப்போ,பிப்08: நம் சமுதாயத்தின் ஏற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் கல்வி இன்றியமையாத பங்களிப்பை ஆற்றும் நிலையில் எல்லாருக்கும் கல்வி கிடைக்க வழிசெய்யும் வகையில் அடிப்படை பாலர்ப்பள்ளி கல்வி பயிற்சியை நன்நிலையில் வழங்கி வரும் புதுயுக கல்வி நிலையத்தை ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் வெகுவாக பாராட்டினார்.
நம் சமுதாயத்தின் தேவை கல்வி என்பதை உணர்ந்து பாலர்பள்ளிக்கு சென்று கல்வியை கற்க முடியாத சூழலில் இருக்கும் மழலைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அடிப்படை பாலர்பள்ளி கல்வியை கற்பிக்கும் புதுயுக கல்வி நிலையம் சரியான இலக்கில் பயணிப்பதை கண்டு தாம் பெருமிதம் கொள்வதோடு அவர்களை மனம் திறந்து பாராட்டுவதாகவும் குலசேகரன் தெரிவித்தார்.
மழலைகளின் கல்வி பயண்ம் நம்பிக்கையாக அமைய வேண்டும்.அத்தகைய நம்பிக்கையை விதைத்து கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான மழலைகளின் கல்வி பயணத்தை தொடக்கி வைத்திருக்கும் புதுயுக கல்வி நிலையம் சிறந்த சமூகப்பணியை ஆற்றி வருவதாகவும் அப்பள்ளிக்கு வருகை புரிந்த துணை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.
மேலும்,எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நம் பிள்ளைகளி கல்வியில் அக்கறை கொண்டிருக்கும் இக்கல்வி நிலையம் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட தாம் சிறு நிதியுதவியை வழங்குவதாக கூறிய அவர் இக்கல்வி நிலையம் தொடர்ந்து அதன் கல்வி பயணத்தை செழிமையுற முன்னெடுக்க சமூக ஆர்வலர்களும் பொது இயக்கங்களும் அவர்களுக்கு உதவிட முன் வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதேவேளையில்,பாலர்ப்பள்ளியில் சேர்க்க வசதியில்லாத குடும்பத்தினர் தங்களின் குழந்தைகளை இங்கு தாராளமாக சேர்க்கலாம் எனவும் நினைவுறுத்திய குலசேகரன் கற்றறிந்த சமூகமாய் நாம் மாறியதன் விளைவுதான் இந்நாட்டில் நமக்கான தனித்துவ அடையாளம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
நம் சமுதாயத்தின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியை இலக்காக கொண்டு செயல்படும் புதுயுக கல்வி நிலையத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் நாம் ஒன்றுப்பட்டு ஒரே இலக்கோடு கர்ன்கோர்த்து பங்காற்ற வேண்டும் எனவும் குலசேகரன் கேட்டுக் கொண்டார்.

