தாய்மொழி மீதான பற்று கட்டாயத் தேவை மட்டுமல்ல; அடுத்த தலைமுறையிடமும் சேர்க்க வேண்டும்! -டத்தோ ரமணன்

இன்று உலக தாய்மொழி தினத்தைஅனுசரிக்கும் தமிழ் மொழிப் பற்றாளர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழாரிசியர் பெருமக்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட தமிழ் மக்கள் அனைவருக்கும், தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

தாய்மொழி என்பது வெறும் கருவி அல்ல. ஒரு இனத்தின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறை, சிந்தனை என எல்லாவற்றிலும் முக்கிய பங்காற்றுகின்ற, நீங்காத அங்கமாக இருக்கும் சிறப்பு அன்னை!

அன்னை மொழியை பிழையற பேசவும் எழுதவும் தெரியாமல் இளைய சமுதாயத்தை வளர்த்து விடுகிறோம் என்பது வருத்தமான நிகழ்வு. அன்னை மொழியை புறக்கணித்து பிள்ளைகளின் இயல்பான சிந்தனையை சிதைக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

அறிவியலில் அதிகபட்சம் நோபல் பரிசை பெற்றவர்கள் எல்லாம் தங்களின் தாய்மொழியில் பயின்றவர்களே. இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் மேதைகளும் தாய்மொழி வழிக்கல்வியே தேவை என வலியுறுத்துகிறார்கள்.

இதனை நன்கு உணர்ந்திருக்கும் நாம், நம் நாட்டில் தமிழ் மொழி தழைக்கவும், தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்கவும் பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகின்றோம். அதற்கு தமிழ்ச் சான்றோர்களும், தமிழ்ப் பற்றாளர்களும், தமிழ் ஊடகவியலாளர்களும் பெரும் பங்களிப்பு வழங்கி வருகிறார்கள்.

இந்நன்னாளில் அப்பெருமக்கள் அனைவரையும் போற்றி, நன்றி பாராட்டுவதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தாய்மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமல்ல; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி என படம் நடத்தியவர் மகாகவி பாரதி.

அன்னை மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயத்தேவை மட்டுமல்ல; அதை அடுத்த தலைமுறையினருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

199ஆம் ஆண்டில் யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் படி, தாய்மொழி தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 21ஆம் தேதி உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles