
தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாள் நம்மிடையே தீமைகள் அனைத்தையும் வென்றெடுத்து, நன்மையின் ஆற்றலைக் கொண்டாடும் பொன்னாளாக இருக்க வேண்டும் என்பதுடன், இத்தீபாவளி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தமது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக மஇகாவின் தேசியத் தலைவரும், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியப் பிரதமரின் சிறப்புத் தூதருமான மாண்புமிகு டான்ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
அதேவேளையில், நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் விரைவில் வரவிருப்பதால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மஇகா முன்னெடுத்துள்ளது. எனவே, நமக்காக திட்டமிடும் கட்சிக்காக, நமக்காக அமல்படுத்தும் கட்சிக்காக நாம் வாக்களித்தால் மட்டுமே, நமது உரிமைகளையும், சலுகைகளையும் இந்நாட்டின் இந்தியச் சமுதாயத்திற்காக நாம் உரிமையுடன் பெற முடியும்.
மஇகா ஒட்டுமொத்த இந்தியர்களின் கல்வி, தமிழ்ப்பள்ளி, சமூக நலன், பொருளாதாரம் ஆகியவற்றில் நம் சமுதாயம் – நம் கடமை என்ற மந்திரச் சொல்லின் பொருளை உணர்ந்து செயலாற்றி வருகின்றது.
இந்த நோக்கத்தை ஒவ்வொரு இந்தியரின் இதயத் துடிப்பிலும் கலந்திருக்க வேண்டும்.
நாம் முன்னெடுக்கும் திட்டங்கள் அனைத்துமே எதிர்கால சந்ததியினருக்கும் பயன்பெற வேண்டும் என்ற அசைக்க முடியாத நிலைப்பாட்டினை மஇகா கொண்டிருக்கிறது. இந்த நோக்கத்தினை இந்தியச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் மனத்தில் கொண்டு, வரக்கூடிய 15ஆவது பொதுத் தேர்தலில் நமது பலத்தினையும், வலுவினையும் காட்டும் வகையில், அந்தந்த மாநிலத்தில் போட்டியிடும் நமது மஇகாவின் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரு மனதாக வாக்களித்து, அவர்களை வெற்றிப் பெற செய்ய வேண்டுமென்று இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

