
விடிஆர் விசாவுக்கு மனு செய்யாத முதலாளிகளின் அந்நியத் தொழிலாளர்களுக்கான கோட்டா ரத்து செய்யப்படவுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.இந்தப் புதிய நடைமுறைக்கு 22 தொழில் துறைகள் பெரும் அதிருப்தியும் கவலையும் தெரிவித்துள்ளன.
அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு குடிநுழைவுத் துறையின் விடிஆர் Visa dalam Rujukan (VTR) விசாவை பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
FWCMS வாயிலாக இந்த விடிஆர் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த விடிஆர் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்நியத் தொழிலாளர்களுக்கான கோட்டா ரத்து செய்யப்படும் என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு நாட்டில் தொழில் வர்த்தக சங்கங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வர்த்தக சங்கங்களுக்கு தலைமையேற்ற பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி வேதனையோடு தெரிவித்தார்.
விடிஆர் விசாவுக்கு இறுதி நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் முதலாளிமார்கள் விரைந்து தொழிலாளர்களுக்கு விண்ணப்பம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த அதற்கான விண்ணப்ப அகப்பக்கங்கள் முடங்கி போய் உள்ளன.
குடிநுழைவுத் துறை அலுவலகங்களுக்கு சென்றால் கூட இப் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது இல்லை.
மேலும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களை இழக்க வேண்டிய கட்டாயம் வர்த்தகர்களுக்கு ஏற்படுகிறது என்று அவர் சொன்னார்.அந்நியத் தொழிலாளர்களை தேர்வு செய்து கொண்டு வருவதற்கு முதலாளிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவை.
அந்நியத் தொழிலாளர்களை நம்பி இருக்கும் நாங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதிது புதிதாகக் கொண்டு வரப்படும் நடைமுறைகள் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. விடிஆர் விசா முறைக்கான விண்ணப்பத்திற்கான இறுதி நாள் இன்னும் 6 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும்.
அப்போதுதான் இது போன்ற விவகாரங்களில் முடிவு எடுக்கும் போது எங்களை போன்ற வர்த்தக சங்கங்களை அழைத்துப் பேச வேண்டும். இல்லையென்றால் மலேசியத் தொழில் துறைதான் பெருமளவில் பாதிக்கும் என்று டத்தோ ஜவஹர் அலி எச்சரித்தார்.

