
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு திமுக எதிர்வினையாற்றியுள்ளது.
இது தொடர்பாக பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறும்போது, “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அற்பமான காரணங்களைக் கூறி தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிகிறார்.
தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை. மக்களிடம் இருந்து சம்பாதித்துள்ள அதிருப்தியை நிர்மலா சீதாராமன் உணர்ந்திருக்கலாம்.
மக்களின் பிரச்சினைகளை அவர் எடுத்துரைத்த விதம் நிச்சயமாக அவருக்கு எதிராக அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதனை நிர்மலா சீதாராமனும் உணர்ந்திருக்கலாம் என்பதால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அதிக அளவில் பணம் பறித்துள்ளது. பாஜகவிடம் ரூ.6,000 கோடி உள்ளது. பாஜக அமைச்சரவையில் நிர்மலா முதன்மை அமைச்சர். அப்படியெனில் பாஜகவால் ஏன் அவருக்கு ஸ்பான்சர் செய்ய முடியாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

