
செ.வே. முத்தமிழ் மன்னன்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 5-
பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் 20 ஆம் ஆண்டு சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி வரும் ஜூலை 13 ஆம் தேதி சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறுகிறது.
மாணவர்கள் பிரிவில் 64 குழுக்களும் மாணவிகள் பிரிவில் 32 குழுக்களும் பங்கேற்கின்றன.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை தலைமையில் நடைபெறும் இந்த போட்டியில் மாணவர்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுக்களுக்கு 7,000 வெள்ளி ரொக்கமும் மாணவிகள் பிரிவில் வெற்றி பெறும் குழுக்களுக்கு 5,000 வெள்ளி ரொக்கமும் வழங்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் செயலாளர் இராமச்சந்திரன் தெரிவித்தார்.
கடந்தாண்டு முதல் முறையாக சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப் பள்ளி மாணவிகள் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டும் போட்டியில் பங்கேற்க மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதால் அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் அமரர் நமச்சிவாயம் கிண்ணப் பெயரில் நடத்தப்படும் இந்தப் போட்டிக்கு சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கம் ஆதரவை வழங்கி உள்ளது என்றார் அவர்.

