
செ வே. முத்தமிழ் மன்னன்
பெர்ஜாம், ஏப்ரல் 5-
பேராக் மாநிலத்தில் Bercham Selatan என்ற இடத்தைச் சேர்ந்த 79 வயதான இந்திய மூதாட்டி தனலட்சுமி த/பெ பக்கிரிசாமிக்கு மலேசிய குடியுரிமை கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.
வாடகை வீட்டில் தங்கி இருக்கும் இவர் குடியுரிமை பெற நீண்ட காலம் போராட்டம் நடத்தினார்.
மகன் புற்றுநோயால் இறந்து விட்டதால் அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் இல்லை.
இதற்கு முன்னர் சிகப்பு அடையாளக் கார்டு இருந்ததால் இவரால் எந்தவொரு அரசாங்க சலுகையும் பெற முடியவில்லை.
பல இடங்களில் முட்டி மோதி அலைந்த மூதாட்டி தனலெட்சுமி கடந்த ஆண்டு 28-3.2023 ஆம் தேதி பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமாரின் உதவியை நாடினார்.
இவருக்கு குடியுரிமை பெற்று தர சிவகுமார் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
இறுதியாக 1-4.2024 ஆம் தேதி தேசிய பதிவு இலாகாவில் இருந்து இவருக்கு அழைப்பு வந்தது.
தேசிய பதிவு இலாகாவுக்கு சென்ற இவருக்கு மலேசிய குடியுரிமை கிடைக்கப்பெற்றது.
தமக்கு குடியுரிமை பெற்று தர போராடிய மனிதவள முன்னாள் அமைச்சர் வ சிவகுமாருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மூதாட்டி தனலெட்சுமி தெரிவித்தார்.

