
காளிதாஸ் சுப்பிரமணியம்
புத்ராஜெயா, ஏப் 9 – தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சராக பதவியேற்று 100 நாட்கள் பூர்த்தியான நிலையில் நாடு மற்றும் மக்களின் பொருளாதார நிலையை மேலும் வலுப் பெறச் செய்வதை தமது பிரதான இலக்காகக் கொண்டு டத்தோ ஆர்.இரமணன் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கனவையும் இலக்கையும் வெற்றி பெறச் செய்யும் முயற்சியாக பொருளாதாரத்தை வலுப்படுத்த தாம் எண்ணம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த அளப்பரிய பணியில் தாம் மட்டுமல்லாத கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக்கும் முழு பங்களிப்பை வழங்குகிறார்.
இந்த நியமனத்தை சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக மக்களும் நாடும் வழங்கிய அங்கீகாரமாகவும் பொறுப்புமிக்க கடமையாகவும் நான் பார்க்கிறேன்.
அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் சுபிட்சத்திற்கு நேர்மையுடனும் உயர்நெறியுடனும் ஆற்ற வேண்டிய பொறுப்பு மிக்க பதவியாக இது விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

