
கோலாலம்பூர் ஏப்ரல் 9-
அம்னோ மற்றும் ஜசெக கட்சிகளின் உறுப்பினர்களை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்தானா நெகாராவில் இன்று சந்தித்து உரையாடினார்.
நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் மத மற்றும் இன உணர்வு தொடர்பான பிரச்சனைகள் குறித்த அண்மைய முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டதாக மாமன்னர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசன், மலாக்கா மாநில அம்னோ தலைவர் அப்துல் ராவுஃப் யூசோ, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அக்மால் சாலே, ஜசெக-வின் துணை செயலாளர் லீயூ சின் தோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்களிடையே பிரிவினைக்கு பதிலாக ஒற்றுமையை வலுப்படுத்த அனைத்துத் தரப்பு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக் கொண்டார்.
பிரி மலேசிய டூடே

