
காளிதாஸ் சுப்ரமணிம்
பத்தாங் காலி ஏப்ரல் 12-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து இன்னும் விவாதிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
இது பற்றி இன்னும் யாருடனும் விவாதிக்கவில்லை என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் சுருக்கமாக பதில் அளித்தார். பத்தாங் காலியில் இன்று நோன்பு பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேவரன் பச்சைமுத்து உட்பட ஏராளமானோர் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. பின்னர் மே 11 ஆம் தேதி வாக்களிப்பு இடம் பெறுகிறது. இம்முறை பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான நேஷனல் இடையே கடுமையான போட்டி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

