கட்சி அல்ல, கொள்கையே முக்கியம்; துணிச்சலாகக் குரல் கொடுப்பவர்களை மதிக்க வேண்டும் – டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன்

ஜெம்போல், ஜூலை 25-
நாட்டின் நல்லிணக்கமும் ஒற்றுமையும் நிலைத்திருக்க, அரசியல் கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் கொள்கைக்காக துணிச்சலாகக் குரல் கொடுப்பது, எளிமை மற்றும் ஒற்றுமையைப் பேணுவது போன்ற பண்புகள் அனைத்து அரசியல் தலைவர்களிடமும் இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் PKR தேர்தல் பிரிவு இயக்குநர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அனைத்து மலேசியர்களின் உரிமைகளையும் உறுதியாகப் பாதுகாத்து, இனவாத அரசியலை நிராகரித்த MIC தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டை அவர் வரவேற்றார்.

“பாஸ் தலைவர்களின் பொறுப்பற்ற கருத்துக்களை அவர் வெளிப்படையாகக் கண்டித்திருப்பது, நல்லிணக்கத்தை விரும்பும் பெரும்பான்மையான மலேசியர்களின் உணர்வை பிரதிபலிக்கிறது.

அதேவேளையில், பெரிக்காத்தான் நேஷனல் (PN) தொடர்ந்து முன்னெடுத்து வரும் குறுகிய இனவாத அரசியலை மக்கள் கடுமையாக நிராகரிக்கிறார்கள்.

“PN தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமட் நோர், மலேசிய சீனர் மற்றும் இந்தியர்களின் நாட்டுப்பற்றையே கேள்விக்குட்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் பொறுப்பற்றதுடன், தேசிய ஒற்றுமையையும் பாதிக்கக்கூடியது,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியர்களும் சீனர்களும் இந்நாட்டில் ‘விருந்தினர்கள்’ அல்லது வெளிநாட்டவர்கள் அல்ல; மாறாக, மலேசியாவில் பிறந்து, நாட்டிற்காக உழைத்து, மலேசியாவிற்கும் மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங்கிற்கும் முழு விசுவாசத்துடன் வாழும் இந்நாட்டின் மக்களே என டாக்டர் சத்யா வலியுறுத்தினார்.

மேலும், விக்னேஸ்வரனின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது என்றும், ஒருவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டிலும், அவர் கொள்கைக்காகக் குரல் கொடுக்கும் துணிச்சலே மதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

“டான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் அறிக்கையை நான் பாராட்டுகிறேன். தற்போதைய அரசியல் சூழலில் எளிதில் சொல்ல முடியாத கருத்தாக இருந்தபோதிலும், அவர் நம்பும் கொள்கையைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

“அவர் MIC-யைச் சேர்ந்தவராகவும், நான் PKR-ஐச் சேர்ந்தவராகவும் இருந்தாலும், சரியான விஷயத்தை யார் கூறினாலும் அது பாராட்டப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன்.

“அரசியலில், கொள்கையைக் காக்கும் துணிச்சல், மிதமான அணுகுமுறை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மலேசியாவின் ஆவியைப் பாதுகாக்கும் மனப்பான்மை ஆகியவை மதிக்கப்பட வேண்டியவை,” என்றார்.

மலேசியா பல்வேறு இனங்களும் கலாசாரங்களும் இணைந்து உருவாக்கிய நாடு என்பதையும், மலேசிய குடியுரிமை பெற்ற ஒவ்வொருவரும் இந்த நாட்டின் பிரிக்க முடியாத அங்கம் என்பதையும் அவர் நினைவூட்டினார்.

“எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாட்டின் நலன் மற்றும் மக்களின் ஒற்றுமை தொடர்பான விடயங்களில் அனைத்து தலைவர்களும் தங்கள் கொள்கையையும் துணிச்சலையும் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

“இந்த அறிக்கையை நான் யாரையும் புகழ்வதற்காகவோ அல்லது எந்தத் தரப்பையும் ஆதரிப்பதற்காகவோ வெளியிடவில்லை. மாறாக, முதிர்ச்சியான அரசியலை விரும்பும் மலேசிய மக்களின் குரலாக இதை நான் நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles