
எம். பவளச்செல்வன்
கோல குபு பாரு, ஏப், 28: கோல குபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் கூட்டணிக்கு வழங்கப்படும் வாக்குகள் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டு வராது என்பதை இங்குள்ள வாக்காளர்கள் உணர வேண்டும் என தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நினைவுறுத்தினார்.
தேசிய அரசியல் நீரோட்டத்தில் மக்களின் வாழ்வாதாரமும் நாட்டின் வளப்பமும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
இதனை உறுதி செய்யும் மிகப் பெரிய கடப்பாடு ஆளுங்கட்சிக்கு உள்ளது. நாட்டின் பிரதமரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் ஆட்சி மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை ஒளி தற்போது அதிகரித்துள்ளது.
இன்றைய காலச் சூழலில், எதிர்க்கட்சிக்குத் தேவை மக்களின் ஆதரவு. அந்த ஆதரவைத் திரட்ட வேண்டும் என்பதற்காக, அக்கட்சியில் உள்ளவர்கள் பல்வேறு கோணங்களில் சிந்திப்பார்கள்.
எப்படி பக்கத்தான் கூட்டணிக்கான ஆதரவைத் திசைத் திருப்ப முடியும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள். ‘
அப்படி, இப்படி’ யோசித்து எப்படியெல்லாம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியுமோ அதற்கான வழியையும் தேடுவார்கள் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
எதிர்கட்சிக்காரர்களின் தேடலுக்குக் கிடைத்த மேடைதான் கோல குபு பாரு’ இடைத் தேர்தல்
இனி என்ன? பிரச்சாரம் மட்டுமே .பிரச்சாரங்கள் அப்படியே திசை மாறி…. எல்லாமே பொய்ப் பிரச்சாரமாகிவிடும்.
இவர்களின் பேச்சால் அரங்கமே அல்லோலப்படும் என்று எதிர்க்கட்சியினரை அவர் சாடினார்.
கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, 2013ஆம் ஆண்டு தொடங்கி, அதாவது மூன்று தவணைகளாக ஜசெக வசம் இருந்தது. இங்கு மொத்தம் 40,226 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். இதில், 49.3 விழுக்காட்டினர் மலாய்க்காரர்களாவர். இதனைத் தொடர்ந்து 30.6 விழுக்காட்டினர் சீனர்களும் 17.9 விழுக்காட்டினர் இந்தியர்களும் மீதமுள்ள 2.2 விழுக்காட்டினர் இதர இனத்தவர்களாக விளங்குகின்றனர்.
இந்த விழுக்காட்டின் அடிப்படையில் பார்த்தோமேயானால், 17.9 விழுக்காடாக இருக்கும் இந்தியர்களின் வாக்குகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கூடிய நிலையில் இருக்கின்றன என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனை ஆழமாக ஆராய்ந்துப் பார்த்தால், இக்கூற்று உண்மை என்றே சொல்லலாம் என டத்தோ ரமணன் தெரிவித்தார்.
இந்தியர்களின் தேவை அறிந்து அவர்களின் உயர்வுக்கு வித்திடும் அடிப்படை பணிகள் கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய டத்தோ ரமணன், இந்திய சமுதாயத்தின் மேன்மைக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்கட்சியின் இனிப்பான பொய்பிரச்சாரங்களை எளிதில் நம்பி விட வேண்டாம் என்றும், அவர்களால் இந்திய சமூகத்திற்கு எந்தவொரு மேம்பாட்டையும் கொண்டு வர இயலாது என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

