
கெர்லிங்.மே.5- கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வாரியத்துக்கு கடந்த நான்கு ஆண்டில் ரி.ம. 380,000.00 நிதியாக சிலாங்கூர் மாநில அரசு வழங்கியுள்ளது.
கடந்த மாநில தேர்தலுக்கு முன்பு சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த துவான் கணபதி ராவ் ஆண்டு தோறும் ரி.ம. 100,000.00 வழங்கி வந்தார். கடந்த ஆண்டு ரி.ம. 80,000.00 வழங்கினார் என்று கெர்லிங் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் வாரியத் தலைவர் குமரன் மாரிமுத்து தெரிவித்தார்.
இப்பள்ளி வாரியம் வசதி குறைந்த மாணவர்களுக்கு பிரத்தியேக ஆசிரமத்தைப் பள்ளி வளாகத்தில் நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தைக் கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. மொத்தம் 22 வசதி குறைந்த இந்திய மாணவர்கள் தற்போது இப்பள்ளியில் தங்கிப் படிக்கின்றனர்.
மாணவர்களுக்கு காலை பசியாறுதல், 10.00 மணிக்குச் சிற்றுண்டி, நண்பகல் உணவு, மாலை 3.00 மணிக்கு மேல் தேநீர் பலகாரம் மற்றும் இரவும் வழங்கப் படுகிறது.
இவ் வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த மாணவர்கள், பள்ளிக்கு வறுமையின் காரணத்தால் வர முடியாத இந்திய மாணவர்களைத் தத்து எடுத்துப் பள்ளி ஆசிரமத்தில் தங்க வைத்து முறையான கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிகளை இப்பள்ளி வாரியம் வழங்கி வருகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரில் உள்ள எல்லாத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து விடாமல் ஆண்டுதோறும் கணிசமான அளவில் நிதியுதவி செய்து வருகிறது என்று குமரன் மாரிமுத்து தெரிவித்தார்.
Selangor kini