
காளிதாஸ் சுப்ரமணியம்
சுங்கை திங்கி மே 6-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஐந்து தோட்டங்களை சேர்ந்த 245 பாட்டாளிகளுக்கு 8 கோடி வெள்ளியில் தரை வீடுகளை வழங்கும் முக்கிய அறிவிப்பை வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் இன்று வெளியிட்டார்.
இதன் வழி 26 ஆண்டுகளாக சொந்த வீடுகளுக்கு போராடி வரும் ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த பாட்டாளிகளின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த விழாவில் மண்ணின் மைந்தர் என்று வர்ணிக்கப்படும் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜ் கலந்து சிறப்பித்தார்.
அப்போது குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புதிய படைப்பான மும்மொழி அகராதி புத்தகத்தை அமைச்சர் ஙா கோர் மிங்கிடம் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் வழங்கினார்.
இந்த புத்தகத்தை பெற்றுக் கொண்ட மறுகணமே அமைச்சர் ஙா கோர் மிங் பக்கத்தை புரட்டி பார்த்து படிக்க தொடங்கினார்.
நானும் விரைவில் தமிழை எளிதாக கற்றுக் கொள்வேன் என்றார் அவர்.
மேலும் இந்த மும்மொழி அகராதி புத்தகத்தை அவர் வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

