

செ.வே.முத்தமிழ்மன்னன்
சுங்கை திங்கி, மே 6-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஐந்து தோட்டங்களை சேர்ந்த 245 பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் கிடைக்க உதவிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் மற்றும் சிலாங்கூர் மாநில அரசுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் திருமதி திலகேஸ்வரி தெரிவித்தார்.
பெர்ஜெயா மேம்பாட்டு நிறுவனம் வழங்கிய 20 ஏக்கர் நிலப்பரப்பில் 245 தோட்டப் பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் கட்டப்பட உள்ளன.
இதற்காக மத்திய அரசு 4 கோடி வெள்ளியும் சிலாங்கூர் மாநில அரசு 3 கோடியே 50 லட்சம் வெள்ளியும் ஒதுக்கியுள்ளது பாராட்டுக்குரியது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நைகல் கார்ட்டன், புக்கிட் தாஹார், மேரி தோட்டம், மிஞ்சாங் தோட்டம் மற்றும் சுங்கை திங்கி ஆகிய ஐந்து தோட்டங்களை சேர்ந்த பாட்டாளிகள் புதிய வீடுகளில் குடியேற உள்ளனர்.
26 ஆண்டுகளாக நீடித்த இந்த பிரச்சனைக்கு சுமூகமான முறையில் தீர்வு கண்ட மத்திய அரசு மற்றும் சிலாங்கூர் மாநில அரசுக்கு தோட்டப் பாட்டாளிகள் சார்பில் நன்றியை பதிவு செய்கிறேன்.
வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டுக்குரியவர்கள்.
புக்கிட் தாஹார் மற்றும் சுங்கை திங்கி வட்டார கவுன்சிலர் என்ற முறையில் இங்குள்ள மக்களுக்கு எனது சேவை தொடரும் என்று அவர் சொன்னார்.

