
கோலாலம்பூர், மே 23 – காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (சியா) எஸ்கியூ321 விமானத்தில் ஒரு பணியாளர் உட்பட ஒன்பது மலேசியர்கள் காயமடைந்ததை தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள மலேசியத் தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.
கடந்த செவ்வாய்க்கிழமை (மே 21) லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பறந்துகொண்டிருந்த அந்த விமானம் தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் இருந்த ஒன்பது மலேசியர்களும் தற்போது காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அந்த விமானம் 37,000 அடி உயரத்தில் இருந்தபோது திடீரென காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியது.
இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 73 வயதான பிரிட்டிஷ் நபர் என்று சுவர்ணபூமி விமான நிலைய இயக்குனர் கிட்டிபோங் கிட்டிகாச்சோர்ன் முன்னதாகக் கூறியிருந்தார்.

