
சண்டிகர் விமான நிலையத்தில் பெண் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் பாலிவுட் நடிகையும், பாஜகவின் மண்டி தொகுதி எம்.பி-யுமான கங்கனா ரனாவத்தை அறைந்ததாக பரபரப்பு எழுந்துள்ளது.
நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக இமாச்சல பிரதேசத்தில் களமிறங்கி வெற்றி பெற்றிருக்கிறார் கங்கனா ரனாவத். தீவிர பாஜக மற்றும் மோடி ஆதரவாளரான கங்கனா, தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளால் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருப்பவர்.
இந்த சூழலில் சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்து மத்திய காவலர் ஒருவர் கங்கனாவை அறைந்ததாக இன்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
குல்விந்தர் கவுர் எனப்படும் சிஐஎஸ்எஃப் பெண் காவலர், கங்கனா ரனாவத்தின் விவசாயிகளுக்கு எதிரான கருத்தால் அதிருப்தி அடைந்ததில் இவ்வாறு தாக்கியதாக தெரிய வந்துள்ளது.
இன்று சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்த கங்கனா ரனாவத்துக்கும், குல்விந்தர் கவுருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் எழுந்தது.
வாக்குவாதத்தின் ஊடாக பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கங்கனாவின் கருத்துக்கு குல்விந்தர் ஆட்சேபம் தெரிவித்ததில் அங்கே புதிய மோதல் வெடித்தது.
வாக்குவாதத்தின் உச்சமாக, கங்கனா ரனாவத் தெரிவித்த ஒரு கருத்துக்கு உஷ்ணமான குல்விந்தர் கவுர், கங்கனாவை அறைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தில் புகார் தரப்போவதாக கங்கனா கூறியதாக தகவல்கள் வெளியாயின. வாக்குவாதம் மற்றும் அறை விழுந்த சம்பவம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

