
காளிதாஸ் சுப்ரமணியம்
ரந்தாவ் ஜூன் 16-
மலேசிய திருநாட்டில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன.
இதில் 400க்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் இந்தியர்களுக்கு சொந்தமானதாகும்.
இதில் பல கூட்டுறவுக் கழகங்களில் பல வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்ற அதே வேளையில் பல கூட்டுறவுக் கழகங்கள் செயல்படாமல் இருக்கின்றதும் வருத்தத்தை தருவதாக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுரவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமக்கிருஷ்ணன் கூறினார்.
இந்த கூட்டுறவுக் கழகங்களின் பிரச்சினைகளும், அதன் இலக்குகளை கண்டறிய இந்திய சமூக கூட்டுறவு மாநாடு இவ்வாண்டு நடத்தப்படும் என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்.
அனைத்து கூட்டுறவுக் கழகங்களை ஒன்றுப்படுத்துவதே எனது முதன்மை நோக்கமாகும்.
அதே வேளையில் இந்திய கூட்டுறவுக் கழகங்கள் எதிர்நோக்குகின்ற சவால்களை கண்டறிவதுடன், எதிர்கால இலக்குகளை திட்டமிடும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட இருப்பதாக அவர் சொன்னார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ரந்தாவில் நேசா கூட்டுறவு கழகத்தின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் 68 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடுகளை வாங்கியவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக சாவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டத்தோ இரமணன் கலந்து கொண்டு வீடு உரிமையாளர்களுக்கு சாவிகளை எடுத்து வழங்கினார்.
ஒரு காலத்தில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கிய போதிலும் இன்று நேசா கூட்டுறவு கழகம் வெற்றிநடை போடுவது பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.
இதுபோன்று தனது இலக்குகளை தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு நேசா கூட்டுறவுக் கழகத்திற்கு வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டார்.

