

ஈப்போ, ஜூன் 24- தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள உலு கிந்தா மனநல மருத்துவமனைக்கு எதிரே விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்த காருக்கு
அருகே மணிக்கட்டு வரை துண்டிக்கப்பட்ட மனிதக் கை கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு கார்களுடன் மோதி விபத்துக்குள்ளான அந்த டோயோட்டா வியோஸ் கார் 95 விழுக்காடு தீயில் அழிந்ததாகப் பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபோராட்ஸி நோர் அகமது கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று காலை 11.16 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தம்புன் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் துண்டிக்கப்பட்ட மனிதக் கை ஒன்று கண்டு பிடிக்கப்பட்ட வேளையில் அக்காரிலிருந்த யாரும் அங்கு
காணப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
காரில் ஏற்பட்ட தீ முற்றாக அணைக்கப்பட்டப் பின்னர் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பை தாங்கள் காவல் துறையிடம் ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் விசாரணைக்காக ஐந்து நாள் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

