
தஞ்சோங் மாலிம்,ஜூலை03: சுற்றுச் சூழல் மீது நாம் அனைவரும் அக்கறையும் விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும்.
சுற்றுச் சூழலை பாதுகாப்பது என்பது நம் அனைவரின் கடமையும் கூட என்று குறிப்பிட்ட தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்ற உறுப்பினர் பா.சிவகுமார் (சிவாலெனின்) நமது பாதுகாப்பான வாழ்விற்கு சுற்றுச் சூழலை பாதுகாப்பானதாகவும் அதன் இயல்பிலிருந்து அது தொலைந்து விடாமலும் நாம் பார்த்து கொள்ள வேண்டியது அவசியமாவதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளையில்,நாட்டில் நாம் நெகிழி (பிலாஸ்டிக்) பயன்பாட்டை குறைப்பதில் தீவிர முனைப்பு காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர் நெகிழியால் மனித உயிர்கள் மட்டுமின்றி பிராணிகளும் மிருகங்களும் எதிர்நோக்கும் சிக்கல்களையும் விவரித்தார்
.சுற்றுச் சூழலுக்கு முதல் எதிரி நெகிழி என்றும் எச்சரித்த அவர் நெகிழி பயன்பாடு குறித்த விழிப்புணர்வும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பொது மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.
குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இந்த பூமி பந்தை நாம் காக்க வேண்டுமானால் நெகிழி பயன்பாட்டை குறைத்தல் அல்லது முற்றாக நிறுத்துதல் குறித்த விழிப்புணர்வையும் செயல்பாட்டையும் நாம் ஆழமாய் விதைக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
தனது ஏற்பாட்டில் நெகிழி பயன்பாட்டை குறைப்போம்,சுற்றுச் சூழலை நேசிப்போம் என்னும் கருப்பொருளோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும்,தஞ்சோங் மாலிம் ஊராட்சி மன்றம் நெகிழி பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையினை கடந்தாண்டு அமல்படுத்தி அது நல்லதொரு வரவேற்ப்பை வழங்கியிருப்பதாகவும் கூறிய அவர் நெகிழி பயன்பாட்டை குறைப்பதில் ஒவ்வொரு தனிமனிதரும் தங்களின் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முன்னதாக இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசிய தஞ்சோங் மாலிம் ஊராட்சி மன்றத் தலைவர் துவான் முகமட் இக்ராஃம் இந்நிகழ்ச்சி காலத்திற்கு உரிய ஒன்று எனவும் இம்மாவட்டத்தில் நெகிழி பயன்பாட்டை பெரும் அளவில் குறைக்க ஊராட்சி மன்றம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

மேலும்,ஊராட்சி மன்றம் மட்டுமின்றி ஒவ்வொருவரும் இவ்விடயத்தில் தங்களின் பங்களிப்பை நிறைவாக செய்திடல் வேண்டும் என்றார்.
அதுமட்டுமின்றி,சமூக அமைப்புகளும் வட்டார இயக்கங்களும் கூட இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும்,அவ்வகையில் உதவிட தஞ்சோங் மாலிம் ஊராட்சி மன்றம் தயாராகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் ஊராட்சி மன்ற உறுப்பினர் சிவகுமார் தொடர்ந்து சுற்றுச் சூழல் விவகாரத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவரது இலக்கு சரியான பாதையில் நகர்வதாகவும் குறிப்பிட்டதோடு இன்றைய நிகழ்ச்சியின் இணை ஆதரவாளரான தஞ்சோங் மாலிம் “EXCELLENT UMA TRAINING & CONSULTANCY” கல்வி நிலையத்தையும் அதன் பயிற்றுனர் திருமதி.உமாவைவும் வெகுவாக பாராட்டினார்.
இக்கல்வி மையம் போல் பொது அமைப்புகளும் ஊராட்சி மன்றத்தோடு கைகோர்த்து இம்மாதிரியான பயன்மிக்க நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார
மேலும்,மாணவர்களை பயிற்றுவித்து அவர்களை பல்வேறு போட்டிகளில் பங்கெடுக்க செய்த்திருப்பது சிறப்பிற்குரியது என்றும் அவர் மேலும் தனதுரையில் குறிப்பிட்டார்.

