
கோலாலம்பூர், ஜூலை 9-
மலேசியா வந்துள்ள ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், மரியாதை நிமித்தம் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமை நாடாளுமன்றத்தில்
சந்தித்தார்.
இன்று காலை 11.00 மணி தொடக்கம் சுமார் 40 நிமிடங்களுக்கு நீடித்த அச்சிறப்பு சந்திப்புக்கு, தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழ் இசை உலகில் இசைஞானி இளையாராஜாவுக்கு அடுத்து இதுகாறும் கோலோச்சிக் கொண்டிருக்கும் இசைப்புயல் ஏ.ரஹ்மானை இனிதே வரவேற்ற பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம், பின்னர் கலந்துரையாடலின் போது அவரின் கலை – கலாச்சார நடவடிக்கைகள் குறித்து விசாரித்தார். ஏ.ஆர்.ரஹ்மானும் தமது அடுத்தத் திட்டங்கள் குறித்தும் விவரித்தார்.
“நம்பிக்கை” எனும் மகாமந்திரம்தான் வாழ்க்கையின் உயர்வுக்கு அடித்தளம். அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் பல சாதனைகளை நிகழ்த்தலாம்.
அது போல, இந்த வாழ்க்கை இனிதே வாழ்வதற்கே! நான் இசையோடு மகிழ்ச்சியாக வாழ்கிறேன். அந்த மகிழ்ச்சி நம் அனைவர் வாழ்க்கைக்கும் தேவை.
நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம். மகிழ்ச்சி நிறைந்திருந்தால் வாழ்க்கையை ரசித்து வாழலாம் என மிகுந்த உற்சாகத்தோடு தமது வாழ்க்கை தத்துவங்களை ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டார்.
அவரின் வாழ்க்கைக் கோட்பாடுகள் பிரதமரை வெகுவாகக் கவர்ந்தன. மாத இறுதியில் தலைநகரில் நடைபெறவிருக்கும் அவரின் இசை நிகழ்ச்சி வெற்றியடைய பிரதமர் வாழ்த்தினார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பணம் மேலும் சிறக்க சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வாழ்த்தினார்.
நேற்று தமது ரசிகர்களை நேரடியாகச் சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான், இன்று பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இம்மாதம் 27ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுன் மாபெரும் இசை நிகழ்ச்சியில் 40,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியை “ஸ்டார் பிளாநெட்” நிறுவனத்தைச் சேர்ந்த டத்தோ ஏலன் ஃபூ, டத்தோ ராஜேந்திரன் ஆகியோர் ஏற்று நடத்துகின்றனர். பிரதமருடனான சந்திப்பில் இவ்விரு தொழிலதிபர்களும், பினாங்கு பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசனும் கலந்து கொண்டனர்.

