
டெல் அவிவ்: ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை காரணமாக ஈரான் – இஸ்ரேல் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஓமன் நாட்டில் போர் விமானங்களை அமெரிக்கா நிலை நிறுத்தி உள்ளது.
சமீப நாட்களாக இரண்டு ஹமாஸ் தலைவர்களும், ஒரு ஹிஸ்புல்லா தளபதியும் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டனர். அதனால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 7 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில், ஹமாஸ் அமைப்பினர் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்டதால், ஈரான் – இஸ்ரேல் இடையிலான நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.
தற்போது இஸ்ரேலை ஈரான் வெளிப்படையாக மிரட்டியுள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈரானின் உச்ச தலைவர் கமேனி மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளில் தனது ராணுவ தலையீட்டை அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

