
காளிதாஸ் சுப்ரமணியம்,
மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர், செப்.9-
தலைநகர் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வு சம்பவத்தில் பரிதாபமாக புதையுண்டு காணாமல்போன இந்திய பிரஜை விஜயலெட்சுமி குடும்பத்திற்கு கோலாலம்பூர் மாநகர மன்றம் வெறும் வெ.30 ஆயிரம் வெள்ளி வழங்கியது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்த 30,000 வெள்ளி
ஏற்புடையதாக இல்லை என்று மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அறிவிப்பு வரை காத்திருந்தோம். ஆனால் ஓர் உயிருக்கு வெறும் வெ.30 ஆயிரத்தை அரசு அறிவித்துள்ளது ஏற்புடையதாக இல்லை என்று இன்று ம இகா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் நஷ்ட் ஈடை மட்டும் அறிவித்தால் போதாது. அதற்கு மேலாக அங்கு நில அமிழ்வு ஏற்பட்ட காரணத்தையும் கண்டறிந்து அதில் சம்பந்தப்பட்ட தரப்பின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி குடும்பத்தினருடன் மஇகா பேச்சு வார்த்தை நடத்தவுள்ளது.
பேச்சு வார்த்தைக்கு பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிரடியாக அறிவித்தார்.

