
ஈப்போ,அக்29-
பேரா மாநில வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்சிகுழு உறுப்பினராக நடப்பு மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வு பிரிவிற்கான ஆட்சிகுழு உறுப்பினர் அ.சிவநேசன் நிச்சயம் இடம் பிடிப்பார் என வீடமைப்பு மற்றும் ஊராட்சிதுறை அமைச்சர் ஙா கோர் மிங் புகழாரம் சூட்டினார்.
வரலாற்றில் சிறந்த ஆளுமையும் திறனும் மிக்க ஆட்சிகுழு உறுப்பினராக இடம் பெறுவதற்கான எல்லா தகுதியும் நனிச்சிறந்த சேவையும் ஆக்கப்பூர்வப் பணியையும் அவர் கொண்டுள்ளார் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தும் இருக்கவே முடியாது என்றார்.
பேரா மாநிலத்தில் ஆட்சிகுழு உறுப்பினராக பொறுபேற்க்கும் ஒவ்வொரு முறையும் சிவநேசனின் செயல்பாடும் சேவையும் காலத்தையும் மிஞ்சி நிற்கும் என்றும் கூறிய அவர் இத்தகைய திறனும் ஆளுமையும் கொண்டவர் ஜசெகவின் அடையாளமாக பேரா மாநிலத்தில் இருப்பது கட்சிக்கு மேலும் வலுசேர்க்கிறது என்றும் கூறினார்.
பேரா மாநில ஜசெகவின் ஊடகவியலாளர் தீபாவளி விருந்தோம்பல் நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலத் தலைவரான அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்,பேரா மாநிலத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்க முடியாத நிலப்பிரச்னைகளை திறன்பட கையாண்டு அச்சிக்கல்களுக்கு தீர்வை ஏற்படுத்தி வரும் சிவநேசன் மக்களின் நன்மதிப்பை பெற்ற மக்கள் பிரதிநிதியாக ஜொலிக்கிறார் எனவும் தெரிவித்தார்.
கடந்தக்காலங்களை காட்டிலும் சிவநேசன் தலைமையில் பேரா மாநிலத்தில் நிலப்பிரச்னைகளுக்கு 90 விழுகாடு தீர்வு காணப்பட்டிருப்பது சிவநேசனின் திறன்மிகு முன்னெடுப்புகளின் சான்று என்றார்.
அதுமட்டுமின்றி,பேரா மாநிலத்தில் இந்தியச் சமுதாயத்தின் குரலாக ஒலிக்கும் சிவநேசன் அச்சமூகத்தின் குறைத்தீர்க்கும் ஒளியாகவே திகழ்வதாகவும் பெருமிதம் கொண்டார்.

