


பினாங்கு, டிச 7-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பினாங்கு மாநில யூஎஸ்எம் அறிவியல் பல்கலைக்கழக கோப்பா அரினா திடலில் தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
ஆண்கள் பிரிவில் 40 தமிழ்ப் பள்ளிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 40 தமிழ்ப் பள்ளி குழுக்களும் கலந்து கொண்டுள்ளன.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பினாங்கு மாநிலம் இந்த கால்பந்து போட்டியை ஏற்று நடத்துகிறது.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த போட்டிக்கு ஒரு லட்சம் வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலையில் இந்த போட்டியை ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மீபாவின் கால்பந்து போட்டி இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் ஒரு களமாக விளங்குகிறது என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
ம இகா மத்திய செயலவை உறுப்பினர் மற்றும் ம இகா விளையாட்டுப் பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் அன்பானந்தன், பினாங்கு இந்திய கால்பந்து கிளப் தலைவர் ஸ்ரீ சங்கர், மலேசிய சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஸ், செனட்டர் லிங்கேஸ்வரன் மற்றும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

