
தி.மு.க., கூட்டணியை சிதறடிக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் செயல் திட்டமாக உள்ளது” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் விமானநிலையத்தில் கூறியதாவது: வி.சி., கட்சி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தேசிய அளவில் ‘இண்டியா’ கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. புதிதாக ஒரு கூட்டணியில் நாங்கள் இடம்பெற வேண்டிய தேவையே எழவில்லை.
வி.சி., கட்சி குறி வைக்கப்படுகிறது என்பதை விட, தி.மு.க., கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கக் கூடாது. அதனைச் சிதறடிக்க வேண்டும் என்பது அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் செயல் திட்டமாக உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ., வினரின் நோக்கம், தொடர் வெற்றி பெறும் தி.மு.க., கூட்டணி, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதுதான். கூட்டணியில் எங்களுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்கும் சூழலிலும் நாங்கள் இல்லை.
இந்நிலையில் நான் அரசியல் பேசாமல் நுால் வெளியீட்டு விழாவில் இருந்தால்கூட அரசியல் ஆக்கிவிடுவர். இதற்காக காத்திருப்போருக்கு தீனி போட நான் விரும்பவில்லை. நானும், விஜயும் ஒரே மேடையில் நின்றிருந்தால் அதை வைத்து அரசியல் சூதாட்டம் ஆட விரும்புவோர் தமிழக அரசியல் களத்தில் கலவரத்தை உருவாக்கிவிடுவர். அதற்கு இடம்தர நான் விரும்பவில்லை.என்றார்.

