
ஈப்போ, டிச.18- இங்குள்ள லகாட் சாலை அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் ( செட்டியார் கோவில்) 16 ஆண்டாக ஈப்போ அருணகிரிநாதர் மன்றத்தின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டிற்கான அருணகிரிநாதர் விழா கொண்டாடப்படவுள்ளது.
இந்நிகழ்வு இம்மாதம் 31 இல் தொடங்கி புத்தாண்டில் ஜனவரி 1 இல் நிறைவுபெறும் என்று மலேசிய முருகபக்தி பேரவையின் தேசிய தலைவரும், ஈப்போ அருணகிரிநாதர் மன்ற தலைவருமான மகப்பேறு மருத்துவர் வ.ஜெயபாலன் கூறினார்.
இம்முறை மலேசியாவில் இம்மாதம் 25 இல் தொடங்கி ஜனவரி 4 வரை பத்து நகர்களில் அருணகிரிநாதர் விழா கொண்டாடப்படவுள்ளது.
முத்தாய்பு அங்கமாக ஈப்போவில் வரும் 31 ல், மாலை 6.30 தொடங்கி இரவு மணி10.30 க்கு முற்றுப்பெறும்.
அதனைத் தொடர்ந்து புத்தாண்டின் முதல் நாளில் காலை மணி 8.30 க்கு தொடங்கி இரவு மணி 10.00 முடிவுறும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்விற்கு முன்னதாக டிசம்பர் 26 முதல் 29 வரை நான்கு நாட்களுக்கு “அமுதம்” சமய பண்பாட்டு வகுப்புகள் வழக்கம் போல இவ்வாண்டும் நடைபெறவுள்ளது. இதுவரை சுமார் 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவ்வகுப்புகள் பொற்கிழிக்கவிஞர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா தலைமையில் அவரின் பாடத்திட்டத்தின் அடிப்படையில்
நடைபெறும்.
ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணிக்கு தொடங்கி மதியம் 12.00 க்கு முடிவுபெறும். பங்கு பெறும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன், இவ்வாண்டு முருகனின் வேல் வழிபாடு குறித்த விளக்கமும்,வழிபாட்டு முறையும் இம்மாதம் 30 இல் இந்த தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வழிபாடு மாலை மணி 6.00 க்கு தொடங்கி இரவு மணி 9.30 க்கு முற்றுப்பெறும். இவ்வழிபாட்டில் 108 வேல்கள் பயன்படுத்தப்படும். இவ்வழிபாடு ஓதுவார் ஜெகன்நாதன் சிரவை ஆதினம் கோவை அவர்களால் வழிநடத்தப்படும். ஆகவே, முருக பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு தலைவருமான பேராசிரியர் மருத்துவர் வ.ஜெயபாலன் கேட்டுக்கொண்டார்.
இம்முறை நடைபெறும் அருணகிரிநாதர் விழாவில் சிறப்பு பிரமுகர்களின் திருப்புகழ் சொற்பொழிவுகள், இசை வழிபாடு, திருப்புகழ் நாட்டிய நாடகங்கள் என்று முத்தமிழும், முருக பக்தியும் சங்கமிக்கும் ஆன்மீக பெருவிழாவாக அமையும்.

